’என் கதை கதை-உன் கதை கதை...உன் கதை என் கதை!’என ஒரு மல்லுக்கட்டிற்குப் பின் வெளியாகும் படம் என்பதாலும், ’இன்று போய் நாளை வா’படத்தின் ரீமேக் என்பதாலும் சந்தானம்-பவர் ஸ்டார் காம்பினேசன் என்பதாலும் என் எதிர்பார்ப்பைக் கிளப்பிய படம்.
ஒரு ஊர்ல.................... !
அந்த ஒரு ஊர்ல ஒரு ஃபிகரும் அவரது குடும்பமும் புதிதாகக் குடியேற, அந்த ஃபிகரை மடக்க மூன்று ஹீரோக்களுக்கு வரும் ஆசையும் அதற்கு அவர்கள் செய்யும் அழிச்சாட்டியமுமே கதை
திரைக்கதை:
ஆரம்பம் முதல் இறுதிவரை காமெடியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இறங்கியிருக்கிறார்கள். ’கல்யாணம் டூ கருமாதி’காண்ட்ராக்டராக சந்தானமும், வயதாகியும் யூத்தாக வெளியில் ஜொள்ளிக்கொண்டு திரியும் பவர் ஸ்டாரும், மூவரில் கொஞ்சம் சின்சியர் லவ்வராக(ஹீரோவாம்!) அறிமுக நடிகர் சேதுவும் ஊரில் ஃபிகர் கிடைக்காமல் நண்பர்களாக அலைந்து கொண்டிருப்பதைச் சொல்லி முடித்ததும் ஹீரோயின்
அறிமுகம்.
அந்த ஃபிகரை கிடைக்க வேண்டும் எனும் ஆவலில் மூவரும் ஆளுக்கொரு ரூட்டை பிடிக்கிறார்கள். சேது ஹீரோயின் அம்மாவிற்கு எடுபிடி வேலைகள் செய்ய,சந்தானம் ஹீரோயின் சித்தப்பா (வி-தா-வ-கணேஷ்)விடம் பாடக சிஷ்யனாய்ச் சேர, பவர் ஸ்டார் ஹீரோயின் அப்பாவான மாஸ்டர் சிவசங்கரனிடம் நாட்டியப் பேரொளியாக(!) களமிறங்குகிறார்கள். சந்தானம் மற்றும் பவர் ஸ்டார் குரு-க்களிடம் செய்யும் காமெடி அதகளம்.
ஒவ்வொரு சீனும் சிரிக்கும்படி இருக்க வேண்டும் என்று களமிறங்கியிருக்கிறார்கள். பெரும்பாலான சீன்களில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
சந்தானம்:
படத்தின் ஹீரோவாக ஒருவர் இருந்தாலும், மெயின் கேரக்டராக சந்தானம் கலக்குகிறார். ‘மார்கழிக் குளிர்ல ரொம்ப நேரம் குனிஞ்சு நிற்காத’ என்பதில் ஆரம்பித்து ‘ நைட் தூக்கம் வர்லையா? ஏன், மத்தியானமே தூங்கிட்டயா?’ என கலாய்க்கும் வசனங்களால் வழக்கம்போல் சூப்பர். ஹீரோயினைக் கரெக்ட் பண்ண, கணேஷிடம் அவர் படும்பாடு சிரிப்பை வரவழைக்கிறது. அதுவும், பானைக்குள் அவர் உட்கார்ந்திருக்கும் சீன், கலக்கல்.
பவர் ஸ்டார் சீனிவாசன்:
அறிமுகக் காட்சியிலேயே பள்ளி மாணவியை லவ்வ, அந்தப் பெண் ‘உங்களை என் அப்பா கல்யாண ஃபோட்டோ பார்த்திருக்கேன்..என் அப்பா ஃப்ரெண்ட் தானே நீங்க?’ என்று கேவலப்படுத்த, ரகளையாக அறிமுகம் ஆகிறார் பவர் ஸ்டார்.
பல இடங்களில் அபாரமான பாடி லாங்வேஜ்களால் கலக்குகிறார். வாயை வைக்கும் விதம், உடலை அசைக்கும் பாங்கு என பவர் ஸ்டார், ஒரு முழு காமெடியனாக இதில் அவதாரம் எடுத்திருக்கிறார். இனி ஹீரோவாக நடிப்பது போன்ற காமெடிகளைப் பண்ணுவதை விட்டுவிட்டு, காமெடியனாக நடிக்க ஆரம்பிக்கலாம்.பல சீன்களில், இவரது பிரசன்ஸே சிரிப்பை வரவழைக்கிறது.
ஹீரோவும் ஹீரோயினும்:
அறிமுக நடிகர் சேது என்பவர் ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். நடிப்பு, காமெடி என எல்லாவற்றியும் நன்றாகவே பண்ணியிருக்கிறார்.நல்ல படம் அமைந்தால், மேலே வரலாம்.
சொம்பு ரொம்ப......................
ஹீரோயினாக விஷாகா சிங். பக்கத்து வீட்டுப் பெண் போல் இருக்கிறார். (நான் சொன்னது, என் பக்கத்து வீட்டு பெண் போல..அவ்வ்!). ஆனாலும் பவருக்கு ஜோடியாக ஆட, அனுஷ்காவா வருவார்? ஏதோ கிடைத்தவரை ஓகே என இவரைப் போட்டிருப்பார்கள் போல..லாங் ஷாட்டில் குமரியாகவும், க்ளோஷப்பில்...சரி, வேணாம்..பாவம்!
தனித்தனியாக காட்சிகள் களை கட்டினாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஏதோ ஒரு வெறுமை தெரிகிறது.
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- சந்தானம்
- பவர் ஸ்டார்
- காமெடி..காமெடி..காமெடி
- எல்லா நடிகர்களிடமிருந்தும், நகைச்சுவையான நடிப்பை வாங்கிய இயக்குநர் மணிகண்டனின் திறமை
அப்புறம்...:
திரைக்கதைத் திலகம் பாக்கியராஜ், அந்த காலகட்டது ஆண்களின் உணர்வை துல்லியமாகப் பதிவு செய்த அளவிற்கு இந்தப் படம் செய்யவில்லை. ராதிகாவிடம் இருந்த வெகுளித்தனம், இந்த ஹீரோயினிடம் மிஸ்ஸிங். மொத்தத்தில் ஒரிஜினலுடன் ஒப்பிடாவிட்டால், ரசிக்கலாம்.
சந்தானத்தின் டைமிங் ஜோக்குகளும் பலத்த கைதட்டல் வாங்குகின்றன. பாடல்கள் உயிரை வாங்குகின்றன. சிம்பு கௌரவ தோற்றத்தில் அட்வைஸ் பண்ண வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த படங்களைவிட, கௌரவ நடிகராக நடித்த க.ல.தி.வா. அதிக நாள் ஓடப்போகும் படமாக இருக்கப் போகிறது.
முதல் நாள் தியேட்டர் ரெஸ்பான்ஸில் தெரியும் விஷயம், படம் உத்தரவாதமாக ஹிட்..!