குரல் வெண்பா
துதிப்போர்க்கு வல் வினை போம்,
துன்பம் போம்,
நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்து கதித்து ஓங்கும்
நிஷ்டயும் கைகூடும்
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசம் தனை
காப்பு
அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.
கவசம்
சஷ்டியை நோக்க சரவணா பவனார்
சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி யாட
மைய நடனஞ் செய்யும் மயில் வாகனனார்
கையில் வேலால் எனை காக்கவென்று வந்து
வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீரிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரவணா பவனார் சடுதியில் வருக
ரஹன பவச ரரரர ரரர
ரிஹன பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரகன வீரா நமோ நம
நிபவ சரகன நிற நிற நிறென
வசர வணப வருக வருக
அசுரர் குடி கெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டு ஆயுதம் பாச அங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டு இலங்க
விரைந்து எனைக் காக்க வேலோன் வருக
ஐயும கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிர் ஐயும் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளி ஐயும்
நிலை பெற்று என் முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலியாம் சிவ குகன் தினம் வருக
ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீரிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத்து அழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்ப்பழகுடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளி பட்டும்
நவரத்னம் பதித்த நற்சீராவும்
இரு தொடை அழகும் இணை முழந்தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செககண
மொகமொக மொகமொக மொகமொகமொனெ
நகநக நகநக நகநக நகனெ
டிகு குண டிகுகுண டிகுடிகு டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேல் முந்து
எந்தனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேஷமும்
லீலா லீலா லீலா விநோதனென்று
உன் திருவடியை உறுதி என்றெண்ணும்
என் தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க்கு உயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பதிரு பல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழு பதினாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாணாம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகள் இரண்டும் கருணைவேல் காக்க
முன்கை இரண்டும் முரண்வேல் காக்க
பின்கை இரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும் பகல் தன்னில் வஜ்ரவேல் காக்க
அறை இருள் தன்னில் அனையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூன்யம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறி கலங்கிட.
இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லினும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்
கன பூசை கொள்ளும் காளியோடு அனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என் பெயர் சொல்லவும் இடி விழுந்தோடிட
ஆனை அடியினில் அரும்பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்
பாவைகளுடனே பல கலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகார் வந்து வணங்கிட
கால தூதாள் எனை கண்டால் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய் விட்டலறி மதி கெட்டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால் கை முறிய
கட்டு கட்டு கதறிக்ட கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாஹா
சொக்கு சொக்கு சூர்ப்பகை சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலதுவாக
விடு விடு வேலை வெருண்டது ஓட.
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனிதொடர்ந்து ஓட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துயர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலை சயங்குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி
பக்க பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்
நில்லா தோட நீ எனக்கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணாள் அரசரும் மகிழ்ந்துறவாகும்
உன்னைத் துதிக்க உன் திருநாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா பதியைக்
காத்து தேவர்கள் கடும் சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர் வேலவனே
கார்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை அழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழனி பதிவாழ் பால குமாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தில் மாமலையுறும் செங்கல்வராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே
காரர் குழலாள் கலைமகள் நன்றாய்
என் நா இருக்க யான் உனைப் பாட
எனைத் தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனை
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை
நேசமுடன் யான நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் இரக்ஷி அன்னமும் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலாயுதனார்
சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க.
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளை என்றன்பாய் பிரிய மளித்து
மைந்தன் என்மீது உன்மனம் மகிழ்ந்தருளித்
தஞ்சம் என்றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி
நேசமுடன் ஒரு நினைவது வாகி
கந்தர் சஷ்டி கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத் தாருறு கொண்டு
ஒதியே ஜெபித்து உகந்து நீரணிய
அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசை மன்னர் எண்மர் செயலது அருள்வார்
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவார்
எந்தநாளும் ஈரெட்டாய் வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாற் காண மெய்யாய் விளங்கும்
விழியால் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரை பொடிப் பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி
அறிந்த எனதுள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீர லட்சுமிக்கு விருந்துணவாகச்
சூரா பத்மாவைத் துணித்தகை யதனால்
இருபத தேழ்வர்க்கு உவந்தமுதளித்த
குருபரன் பழனிக் குன்றினில் இருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத் தடுதாத்கொள் என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்ய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேலே போற்றி
உயர்கிரி கனக சபைகோர் அரசே
மயில் நடமிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவணபவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்
சரணம் சரணம் சண்முகா சரணம்