முன்னாள் அமைச்சரும் திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான வீரபாண்டி ஆறுமுகம் சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த அவர், சென்னையில் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் அவர் உயிர் பிரிந்தது.
1937ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி பிறந்தவர். திமுகவில் கடந்த 1957ல் இணைந்தார். பூலாவரி பஞ்சாயத்து தலைவராக 1958-76 களில் இருந்தார். தனது அரசியல் வாழ்க்கையினை அங்கிருந்து துவக்கிய அவர், வீரபாண்டி பஞ்சாயத்து யூனியன் தலைவராக 70-76ல் இருந்தார். பின்னர் சேலம் மத்திய கோஆப்பரேடிவ் வங்கி தலைவராக 1973-76ல் இருந்தார்.
தமிழக சட்ட மன்றத்துக்கு 1962-67, 67-71, 71-76, 89-91, 96-2001, 2006-2011 ஆகிய காலகட்டங்களில் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
சேலம் திமுக வட்டாரத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தார். தமிழக அமைச்சரவையில் 89-90 ல் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகத் திகழ்ந்தவர். பின்னர் விவசாயத்துறையில் வேளாண் அமைச்சர் பொறுப்பை 1990-91, 96-2001, 2006-2011 காலகட்டங்களில் வகித்துள்ளார். கடந்த 2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் விஜயலக்ஷ்மி பழனிச்சாமியிடம் தோல்வியுற்றார். இவருக்கு 3 மகன்கள்.