சோகத்தைப் பார்க்க வந்தவர்கள் காமெடி செய்த கதை இது!
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியை சமாளிக்க மத்திய அரசிடம் 19,665 கோடி ரூபாய் நிவாரணம் கேட்டது தமிழக அரசு. இதை அடுத்து, வறட்சிப் பகுதிகளைப் பார்வையிடுவதற்காக மத்திய நிபுணர் குழு கடந்த 6-ம் தேதி சென்னை வந்தது. மத்திய திட்டக் குழுவின் துணை ஆலோசகர் மனோஷ் சவுத்ரி தலைமையிலான குழு, டெல்டா மாவட்டங்களிலும், சிறு விவசாயிகள் வேளாண் வணிகக் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் பிரவேஷ் ஷர்மா தலைமையிலான குழு தென் மாவட்டங்களிலும் ஆய்வு செய்தது. குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், போகப் போக காமெடியாகிப்போனதுதான் வினோதம்.
'துக்கம் விசாரிக்க வந்தவங்களுக்கு வரவேற்பா?’
தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதிக்கு வந்தது மத்தியக் குழு. அறுவடை முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு வந்த மத்தியக் குழுவுக்கு, எதையாவது பச்சையாகக் காட்ட வேண்டும் என்று வினோதமாக நினைத்த உள்ளூர் அதிகாரிகள், பசுந்தீவனம் வளர்ப்புப் பகுதியைக் காட்டினர். அடுத்து, ஆலக்குடியில் நடந்த உழவர் பெருவிழாவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே மத்தியக் குழுவுக்கு கரகாட்டத்துடன் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. 'துக்கம் விசாரிக்க வந்தவங்களுக்கு குதூகல வரவேற்பா?’ என்று தலையில் அடித்துக்கொண்டனர் விவசாயிகள்.
கடைசியாக, சீராளூர் கிராமத்துக்குச் சென்றது குழு. அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ராஜமன்னார், குழுவினருக்கு சால்வை அணிவித்து, 'அம்மா’ திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பண்ணைக் குட்டை அமைக்கும் பணியைக் காட்டினார். அடுத்து, ஒரு அங்கன்வாடி மையத்தைப் பார்வையிட்டனர் குழுவினர். இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாத இடங்களை எல்லாம் பார்வையிட்டுவிட்டு, திருவாரூர் மாவட்டம் சென்றனர். வடுவூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் மையத்தையும், வேப்பஞ்சேரியில் உழவர் பெருவிழாவையும் பார்த்து முடிக்கும்போதே இரவு 7 மணி ஆகிவிட்டது. மறுநாள் வர முடியாது என்பதால், சிங்களாந்தி கிராமத்தில் இருட்டுக்குள் போய் சும்மா சுற்றிப்பார்த்தனர். என்ன தெரிந்ததோ தெரியவில்லை!
குளுகுளு வரவேற்பு!
மறுநாள் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலசமுத்திரம், ஏகபெருமகளூர், சீனமங்களம், நாகுடி ஆகிய ஊர்களைப் பார்வையிட்டது குழு. நாகுடியில் புழுதி பறந்துகொண்டிருந்ததால், குழு பார்வையிட வேண்டிய இடத்தில் எல்லாம் தண்ணீர் தெளித்துவைத்திருந்தனர் அதிகாரிகள். குளுகுளுவென அந்த இடத்தைப் பார்வையிட்ட குழுவினர், அருகில் கால்நடைத் துறை சார்பில் நடந்த விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.
கூட்டுறவு சங்கத்துக்குச் சென்றது ஏன்?
பிரவேஷ் ஷர்மா தலைமையிலான குழு மதுரையில் இருந்து புறப்படும்போதே, ''நேரம் குறைவாகத்தான் இருக்கிறது. அதற்குள் நான்கு மாவட்டங்களைப் பார்வையிட வேண்டும். எனவே, மெயின் ரோட்டை ஒட்டியுள்ள ஊர்களுக்கு மட்டும் கூட்டிக்கிட்டுப் போங்க’ என்றனர். கேட்கவா வேண்டும்? மதுரையில் இருந்து சிவகங்கைக்குச் செல்லும் வழியில் அண்ணா நகர் பாலத்தில் நின்றபடி, ''இதோ பாருங்கள்... வைகை எப்படி வறண்டுகிடக்கிறது'' என்று அதிகாரிகள் சொல்ல, ''அச்சா... அச்சா'' என்று குறித்துக்கொண்டது குழு. கருப்பாயூரணி அருகில், காலி குடங்களுடன் வந்த பொதுமக்கள் குழுவை மறிக்க, அவர்கள் திகைத்துபோனார்கள்.
சிவகங்கை மாவட்டத்துக்குள் நுழைந்த அதிகாரிகள், மகாசிவனேந்தல் என்ற ஊரில் விவசாய நிலங்களைப் பார்வையிட்டனர். அதே ரோட்டில் உள்ள சாத்தரசன்கோட்டை, மல்லல், செம்பனூர் போன்ற ஊர்களுக்குச் சென்ற அதிகாரிகள், கால்நடை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், விவசாய கூட்டுறவு சங்கம் போன்றவற்றை எல்லாம் குழுவுக்கு காட்டினர். அவர்களோடு சென்ற சிவகங்கை நகராட்சி தலைவர் அர்ச்சுனன் (சி.பி.எம்.) குழம்பிப்போய், ''சார் இதை எல்லாம் மத்தியக் குழுவுக்கு எதுக்குக் காட்டுறீங்க?'' என்று கேட்டார் அப்பாவியாக. ''வெயில் நேரத்தில் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் வியாதி வந்தால், சிகிச்சையளிக்க போதிய மருந்துகள் இருக்கிறதா என்று காட்டுகிறோம். கூட்டுறவு சங்கத்துக்குச் சென்றால்தானே, விவசாயிகளுக்கு எவ்வளவு கடன், உரம் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரியும்'' என்று சொல்லியிருக்கின்றனர்.
''கரன்ட் பத்தியெல்லாம் அவங்ககிட்ட கேட்கக் கூடாது!''
ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியைப் பார்வையிட வந்த மத்தியக் குழு, அரை மணி நேரத்தில் தங்கள் விசிட்டை முடித்துக்கொண்டு மதுரைக்குத் திரும்பிவிட்டனர். மாலை 3.30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் வந்த அவர்கள், முதலில் நாரணமங்களத்தில் நடந்த கால்நடை மருத்துவ முகாமைப் பார்வையிட்டனர். அங்கு கூடியிருந்த விவசாயிகள், ஆவின் நிறுவனம் தங்களிடம் இருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதேபோல, 100 நாள் வேலை திட்டத்துக்கான வேலை நாட்களையும் கூலியையும் உயர்த்தித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். எருமைப்பட்டி கிராமத்துக்குச் சென்ற ஆய்வுக் குழுவினரிடம், கூடுதல் மண்ணெண்ணெய் கேட்ட விவசாயிகள், போதுமான நேரம் மின்சாரம் வழங்குமாறும் முறையிட்டனர். குறுக்கிட்ட கலெக்டர் நந்தகுமார், ''கரன்ட் பத்தியெல்லாம் அவங்ககிட்ட கேட்கக் கூடாது'' என்று சொல்லி தமிழ்நாட்டின் மானத்தைக் காப்பாற்றினார்.
வரவழைக்கப்பட்ட வட நாட்டு உணவுகள்!
விருதுநகர் மாவட்டத்திலும் நான்கு வழிச் சாலையை ஒட்டியுள்ள கிராமங்களை மட்டுமே பார்த்தது மத்தியக் குழு. மதுரை புறப்படும் முன், விருந்தினர் மாளிகையில் தடபுடல் விருந்து நடந்தது. வெயில் கடுமையாக இருப்பதால், அசைவம் வேண்டாம் என்று மத்தியக் குழுவினர் சொல்லி விட்டனர். சிவகாசியின் பிரபல ஹோட்டலில் இருந்து 20 வகை வட நாட்டு உணவுகள் வரவழைக்கப்பட்டன.
ஃப்ளைட் பிடிக்கும் அவசரம்!
மாலையில் விருதுநகரில் இருந்து வந்த குழுவினர், அப்படியே மதுரை மாவட்ட எல்லையில் உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தில் விவசாயிகளைச் சந்தித்தனர். அவர்கள் வருகையையட்டி அதிகாரிகளே ஷாமியானா பந்தல் போட்டு மக்களைத் திரட்டிவைத்திருந்தனர். கூடுதல் நிவாரணம் கேட்ட விவசாயிகளிடம், ''நாங்கள் நஷ்டஈடு கொடுக்க வரவில்லை. நிவாரணம்தான் கொடுக்க வந்திருக்கிறோம். அரசு நிர்ணயிக்கிற தொகைதான் நிவாரணம்'' என்று லாஜிக் சொன்னது மத்தியக் குழு.
அடுத்து பேரையூர் தாலுகா செல்லார்பட்டி சென்ற குழுவினரின் கவனம் எல்லாம், ஃப்ளைட்டைத் தவற விட்டுவிடக் கூடாது என்பதில்தான் இருந்தது. அவசர அவசரமாக வறட்சியைப் பார்வையிட்டுவிட்டு, விமானம் ஏறி சென்னை சென்றது மத்தியக் குழு. அவர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் மதியம் முதல் காத்திருந்த திருப்பரங்குன்றம் பகுதி மக்கள், ஏமாற்றத்தோடு வீடு திரும்பினர்.
ஏன் வந்தோம் என்று அவர்களுக்கும் தெரியவில்லை. எதற்காக வந்தார்கள் என்று மக்களுக்கும் தெரியவில்லை!
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியை சமாளிக்க மத்திய அரசிடம் 19,665 கோடி ரூபாய் நிவாரணம் கேட்டது தமிழக அரசு. இதை அடுத்து, வறட்சிப் பகுதிகளைப் பார்வையிடுவதற்காக மத்திய நிபுணர் குழு கடந்த 6-ம் தேதி சென்னை வந்தது. மத்திய திட்டக் குழுவின் துணை ஆலோசகர் மனோஷ் சவுத்ரி தலைமையிலான குழு, டெல்டா மாவட்டங்களிலும், சிறு விவசாயிகள் வேளாண் வணிகக் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் பிரவேஷ் ஷர்மா தலைமையிலான குழு தென் மாவட்டங்களிலும் ஆய்வு செய்தது. குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், போகப் போக காமெடியாகிப்போனதுதான் வினோதம்.
'துக்கம் விசாரிக்க வந்தவங்களுக்கு வரவேற்பா?’
தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதிக்கு வந்தது மத்தியக் குழு. அறுவடை முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு வந்த மத்தியக் குழுவுக்கு, எதையாவது பச்சையாகக் காட்ட வேண்டும் என்று வினோதமாக நினைத்த உள்ளூர் அதிகாரிகள், பசுந்தீவனம் வளர்ப்புப் பகுதியைக் காட்டினர். அடுத்து, ஆலக்குடியில் நடந்த உழவர் பெருவிழாவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே மத்தியக் குழுவுக்கு கரகாட்டத்துடன் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. 'துக்கம் விசாரிக்க வந்தவங்களுக்கு குதூகல வரவேற்பா?’ என்று தலையில் அடித்துக்கொண்டனர் விவசாயிகள்.
கடைசியாக, சீராளூர் கிராமத்துக்குச் சென்றது குழு. அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ராஜமன்னார், குழுவினருக்கு சால்வை அணிவித்து, 'அம்மா’ திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பண்ணைக் குட்டை அமைக்கும் பணியைக் காட்டினார். அடுத்து, ஒரு அங்கன்வாடி மையத்தைப் பார்வையிட்டனர் குழுவினர். இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாத இடங்களை எல்லாம் பார்வையிட்டுவிட்டு, திருவாரூர் மாவட்டம் சென்றனர். வடுவூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் மையத்தையும், வேப்பஞ்சேரியில் உழவர் பெருவிழாவையும் பார்த்து முடிக்கும்போதே இரவு 7 மணி ஆகிவிட்டது. மறுநாள் வர முடியாது என்பதால், சிங்களாந்தி கிராமத்தில் இருட்டுக்குள் போய் சும்மா சுற்றிப்பார்த்தனர். என்ன தெரிந்ததோ தெரியவில்லை!
குளுகுளு வரவேற்பு!
மறுநாள் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலசமுத்திரம், ஏகபெருமகளூர், சீனமங்களம், நாகுடி ஆகிய ஊர்களைப் பார்வையிட்டது குழு. நாகுடியில் புழுதி பறந்துகொண்டிருந்ததால், குழு பார்வையிட வேண்டிய இடத்தில் எல்லாம் தண்ணீர் தெளித்துவைத்திருந்தனர் அதிகாரிகள். குளுகுளுவென அந்த இடத்தைப் பார்வையிட்ட குழுவினர், அருகில் கால்நடைத் துறை சார்பில் நடந்த விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.
கூட்டுறவு சங்கத்துக்குச் சென்றது ஏன்?
பிரவேஷ் ஷர்மா தலைமையிலான குழு மதுரையில் இருந்து புறப்படும்போதே, ''நேரம் குறைவாகத்தான் இருக்கிறது. அதற்குள் நான்கு மாவட்டங்களைப் பார்வையிட வேண்டும். எனவே, மெயின் ரோட்டை ஒட்டியுள்ள ஊர்களுக்கு மட்டும் கூட்டிக்கிட்டுப் போங்க’ என்றனர். கேட்கவா வேண்டும்? மதுரையில் இருந்து சிவகங்கைக்குச் செல்லும் வழியில் அண்ணா நகர் பாலத்தில் நின்றபடி, ''இதோ பாருங்கள்... வைகை எப்படி வறண்டுகிடக்கிறது'' என்று அதிகாரிகள் சொல்ல, ''அச்சா... அச்சா'' என்று குறித்துக்கொண்டது குழு. கருப்பாயூரணி அருகில், காலி குடங்களுடன் வந்த பொதுமக்கள் குழுவை மறிக்க, அவர்கள் திகைத்துபோனார்கள்.
சிவகங்கை மாவட்டத்துக்குள் நுழைந்த அதிகாரிகள், மகாசிவனேந்தல் என்ற ஊரில் விவசாய நிலங்களைப் பார்வையிட்டனர். அதே ரோட்டில் உள்ள சாத்தரசன்கோட்டை, மல்லல், செம்பனூர் போன்ற ஊர்களுக்குச் சென்ற அதிகாரிகள், கால்நடை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், விவசாய கூட்டுறவு சங்கம் போன்றவற்றை எல்லாம் குழுவுக்கு காட்டினர். அவர்களோடு சென்ற சிவகங்கை நகராட்சி தலைவர் அர்ச்சுனன் (சி.பி.எம்.) குழம்பிப்போய், ''சார் இதை எல்லாம் மத்தியக் குழுவுக்கு எதுக்குக் காட்டுறீங்க?'' என்று கேட்டார் அப்பாவியாக. ''வெயில் நேரத்தில் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் வியாதி வந்தால், சிகிச்சையளிக்க போதிய மருந்துகள் இருக்கிறதா என்று காட்டுகிறோம். கூட்டுறவு சங்கத்துக்குச் சென்றால்தானே, விவசாயிகளுக்கு எவ்வளவு கடன், உரம் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரியும்'' என்று சொல்லியிருக்கின்றனர்.
''கரன்ட் பத்தியெல்லாம் அவங்ககிட்ட கேட்கக் கூடாது!''
ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியைப் பார்வையிட வந்த மத்தியக் குழு, அரை மணி நேரத்தில் தங்கள் விசிட்டை முடித்துக்கொண்டு மதுரைக்குத் திரும்பிவிட்டனர். மாலை 3.30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் வந்த அவர்கள், முதலில் நாரணமங்களத்தில் நடந்த கால்நடை மருத்துவ முகாமைப் பார்வையிட்டனர். அங்கு கூடியிருந்த விவசாயிகள், ஆவின் நிறுவனம் தங்களிடம் இருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதேபோல, 100 நாள் வேலை திட்டத்துக்கான வேலை நாட்களையும் கூலியையும் உயர்த்தித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். எருமைப்பட்டி கிராமத்துக்குச் சென்ற ஆய்வுக் குழுவினரிடம், கூடுதல் மண்ணெண்ணெய் கேட்ட விவசாயிகள், போதுமான நேரம் மின்சாரம் வழங்குமாறும் முறையிட்டனர். குறுக்கிட்ட கலெக்டர் நந்தகுமார், ''கரன்ட் பத்தியெல்லாம் அவங்ககிட்ட கேட்கக் கூடாது'' என்று சொல்லி தமிழ்நாட்டின் மானத்தைக் காப்பாற்றினார்.
வரவழைக்கப்பட்ட வட நாட்டு உணவுகள்!
விருதுநகர் மாவட்டத்திலும் நான்கு வழிச் சாலையை ஒட்டியுள்ள கிராமங்களை மட்டுமே பார்த்தது மத்தியக் குழு. மதுரை புறப்படும் முன், விருந்தினர் மாளிகையில் தடபுடல் விருந்து நடந்தது. வெயில் கடுமையாக இருப்பதால், அசைவம் வேண்டாம் என்று மத்தியக் குழுவினர் சொல்லி விட்டனர். சிவகாசியின் பிரபல ஹோட்டலில் இருந்து 20 வகை வட நாட்டு உணவுகள் வரவழைக்கப்பட்டன.
ஃப்ளைட் பிடிக்கும் அவசரம்!
மாலையில் விருதுநகரில் இருந்து வந்த குழுவினர், அப்படியே மதுரை மாவட்ட எல்லையில் உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தில் விவசாயிகளைச் சந்தித்தனர். அவர்கள் வருகையையட்டி அதிகாரிகளே ஷாமியானா பந்தல் போட்டு மக்களைத் திரட்டிவைத்திருந்தனர். கூடுதல் நிவாரணம் கேட்ட விவசாயிகளிடம், ''நாங்கள் நஷ்டஈடு கொடுக்க வரவில்லை. நிவாரணம்தான் கொடுக்க வந்திருக்கிறோம். அரசு நிர்ணயிக்கிற தொகைதான் நிவாரணம்'' என்று லாஜிக் சொன்னது மத்தியக் குழு.
அடுத்து பேரையூர் தாலுகா செல்லார்பட்டி சென்ற குழுவினரின் கவனம் எல்லாம், ஃப்ளைட்டைத் தவற விட்டுவிடக் கூடாது என்பதில்தான் இருந்தது. அவசர அவசரமாக வறட்சியைப் பார்வையிட்டுவிட்டு, விமானம் ஏறி சென்னை சென்றது மத்தியக் குழு. அவர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் மதியம் முதல் காத்திருந்த திருப்பரங்குன்றம் பகுதி மக்கள், ஏமாற்றத்தோடு வீடு திரும்பினர்.
ஏன் வந்தோம் என்று அவர்களுக்கும் தெரியவில்லை. எதற்காக வந்தார்கள் என்று மக்களுக்கும் தெரியவில்லை!