அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சியின் பார்சிலோனா கிளப் அணியுடனான ஒப்பந்தம் வரும் 2018ம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி. 25 வயதான இவர், கிளப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பார்சிலோனா அணிக்காக தனது 13வது வயதில் இருந்து விளையாடி வருகிறார்.
மெஸ்சி, கடந்த மாதம் பார்சிலோனா அணியுடனான ஒப்பந்தத்தை வரும் 2016ம் ஆண்டு வரை நீடித்தார். இந்நிலையில் நேற்று, மேலும் இரண்டு ஆண்டுகள் அதாவது யூன் 2018ம் ஆண்டு வரை ஒப்பந்தத்தை நீடித்துள்ளார்.
"லா லிகா", சாம்பியன்ஸ் லீக் உள்ளிட்ட கிளப் அணிகள் பங்கேற்கும் போட்டிகளில் பார்சிலோனா அணிக்காக அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் முன்னிலை வகிக்கும் மெஸ்சி, இதுவரை 289 கோல்கள் அடித்துள்ளார்.
கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட இவர், ஒரு ஆண்டில் (2012) அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். இவர், கடந்த ஆண்டு 91 கோல் அடித்து ஜேர்மனியின் முன்னாள் வீரர் ஜெர்ராடு முல்லரின் சாதனையை முறியடித்தார். இவர், 1972ல் அதிகபட்சமாக 85 கோல் அடித்தார்.
"பிபா" சார்பில் வழங்கப்படும், உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை அதிக முறை பெற்ற வீரர்கள் பட்டியலிலும் அர்ஜென்டினாவின் மெஸ்சி, முன்னிலை வகிக்கிறார். இவர், தொடர்ந்து நான்கு முறை (2009, 10, 11, 12) இவ்விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.